Saturday, October 28, 2017

மெர்சல் - பலமற்ற எதிரியை உருவாக்குகிறதா ரா?

தமிழிசையின் 'மெர்சல்' விஜய் தொடர்பான விமர்சனமும், அதற்க்கு 'நம்மவர்கள்' தரும் பதிலடியை பார்க்கும்போது சலிப்பாகவும், கொஞ்சம் அச்சமாகவும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் 'ரா'மையாக்களால் நாம் திசைத்திருப்பப்படுகிறோம்.
முதலில் நடிகர் விஜய் தொடர்பாக ஒரு டிஸ்க்கிளைமர்: என் வாலிபத்தின் ஆரம்பக் கட்ட நாட்களை முழுமையாக ஆக்கிரமித்தப் படம் 'பூவே உனக்காக'. கணக்குவழக்கே இல்லாமல் பார்த்தப்படம் அது. இன்றும் அந்த படத்தின் கிளைமாக்ஸ் வசனங்களை அப்படியே ஒப்புவிப்பேன். விஜயை எனக்கு பிடிக்கும் என வெறுமன சொன்னால், என் மகள் கோபித்துக்கொள்வாள்.. ஏனென்றால், அவளுக்கு விஜய், மிக மிக மிக பிடித்தமான நடிகர்.
இனி விசயத்துக்கு வருவோம்,
உலகமயமாக்கலின் உச்சத்தில் இருக்கும் இந்த நாட்களில் தான், தமிழ்நாட்டில் மட்டும் தீவிரமான மண் சார்ந்த போராட்டங்கள் நடந்து வருகிறது. தெற்கே 'இந்தியா' என்ற கற்பிதத்துக்கு இன்றளவும் சிம்ம சொற்பனமாக இருப்பது, இங்கிருக்கும் 'ஆரிய எதிர்ப்பு' கருத்தியல் தான். ஆக, 'இந்திய' 'பாரதிய' கருத்தியலை எதிர்க்காத, ஆனால் மண் சார்ந்த விசயங்களை பேசும் கட்சியோ, ஆட்களோ 'இராமையா'வுக்கு வேண்டும். அதற்கான தற்போதைய இரை தான் விஜய்.
திராவிட கருத்தியலும், தீவிர இடதுசாரி கருத்தியலும் கோலோச்சிய காலம் ஒன்று தமிழகத்தில் இருந்தது. இரண்டு கருத்தியலை ஒரு சேர அடித்து நொறுக்க ராமையாவுக்கு கிடைத்த ஆளுமை 'எம்ஜிஆர்'. தமிழ் மண்ணில் வளர்ந்த இடதுசாரி தத்துவங்களை நொறுக்க எம்ஜிஆரை, அமெரிக்காவின் சி.ஐ.எ அமைப்பு வரை உபயோகித்தது என்பதை நான் சொல்லவில்லை, காங்கிரசின் 'நவசக்தி' இதழ் ஏழுபதுகளின் பகுதியில் சொன்னது,எழுதியது.
இனி விஜய்க்கு வருவோம், 'ஆம், அவர் திரையில் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக, வடநாடு அரசியல்வாதிகளுக்கு எதிராக' கருத்துகளை முன்வைக்கிறார். ஆனால், நிஜத்தில் அவர் எத்தனை முறை இதே அரசியலை பேசி இருக்கிறார்?. அவர் பேச மாட்டார். ஏனென்றால், அவருடைய களம் என்பது 'முதலமைச்சர்' அரசியல் கொள்கைகளே தவிர, எந்த தொண்டரையும் கார்பரேட்டுக்கு எதிராகவோ, நடுவண் அரசியலுக்கு எதிராகவோ வலுவாக உருவக்குவது அல்ல. எம்ஜிஆர் என்ற சினிமா பிம்பத்தை எந்த தத்துவமில்லாமல் ஆதரித்ததற்கான விலையை தான், நான்கு தசமங்கள் தாண்டியும், ஓபிஎஸ்-எபிஎஸ் என இன்றளவும் கொடுத்து வருகிறோம்.
ஆக, விஜய் என்ற ஒன்றை நபர், அடுக்கு மொழி வசனங்களை பேசி நடுவண் கட்சிகளுக்கு எதிராக பேசுவதும், அவரை ஒரு எதிரியாக தமிழகத்தில் உருவாக்குவதும், காட்டுவதும் இராமையாகளுக்கும் ஒரு இலகுவான இலக்காக போய் விடும். ஒரே ஒரு சிபிஐ ரெய்டில் எல்லா வீர ஆவேச பேச்சையும் அப்படியே சரணடைய செய்து விடுவார்கள். 'காங்கிரசோ' 'பிஜேபியோ' வேறு எந்த இந்திய கட்சியோ, 'இளைய தளபதியின்' ஒரே அறிக்கையிலே தம்பிகள் அடங்கிப் போய் விடுவார்கள், ஏனென்றால் தத்துவமில்லாத அரசியல் என்பது ஒரு முட்டுசுவர். தமிழகத்தில் தற்போது நடப்பதும் அது தான்.
ஆக, தோழர்களே/உறவுகளே/தம்பிகளே, 'அரசியல் கவனிப்போம்' 'அரசியல் பேசுவோம்' பின் 'அரசியல் செய்வோம்'.
பின்குறிப்பு> 'இராமையா' என்றால் என்னவென்று புரியாத புதியவர்களுக்கு, இந்திய உளவு அமைப்பான 'ரா' வுக்கு தமிழ் தோழர்கள் வழங்கிய கேலிப் பெயர்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156046111982780

No comments:

Post a Comment