Sunday, December 28, 2014

தமிழகத்தில் பிஜேபியை தள்ளி வைக்கும் 10 விஷயங்கள்



(1) தமிழர் பிரச்சனைகள்:
 தமிழ்நாட்டில் இன்றளவும் மிக முக்கியமான பிரச்சனைகளாக இருக்கும் கூடங்குளம், மீத்தேன், முல்லைப்பிரச்சனை,காவேரி போன்றவைகளில் திடமாக தமிழ் மக்களோடு கைகோர்த்து நிற்கும் அளவில் தமிழ்நாடு பிஜெபி இல்லை. அண்டை மாநில பிஜேபியினர் இதுபோன்ற பிரச்சனைகளில் தமது மாநில நன்மையை முன்வைத்தே பேசுகிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் (உதா: அணுவுலை, அணுக்கழிவு பிரச்சனை).
(2) திராவிட கட்சிகளின் இந்துமத சமரசம்: அதிமுக தனது கட்சியின் பெயரில் 'திராவிடத்தை' கொண்டிருந்தாலும் கால்நூற்றாண்டுக்கு மேலாக 'அரை-பிஜேபி' யாக தான் ஆண்டு வருகிறது. ஆக, நடுத்தர மற்றும் அடித்தட்டு தமிழ் சாமானிய இந்து மக்கள் 'திராவிட கட்சிகள்' தங்கள் மதத்தை அழிக்காது என்பதை தெளிவாய் புரிந்துவைத்திருக்கிறார்கள்.
(3) ஆளுமை பற்றாக்குறை: காங்கிரஸ் இவ்வளவு காலம் தமிழ்நாட்டில் தாக்குப்பிடித்ததற்கு மிக முக்கியமான காரணம் காமராசர் என்ற ஆளுமை. அவருக்கு பிறகு வந்த ஒருசில காங்கிரஸ் தலைவர்களும் ஓரளவுக்கு தமிழ்நாட்டை மத்தியில் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தும் பிஜேபி ஆளுமை தமிழ்நாட்டில்\டெல்லியில் யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள்?
(4) வட மொழி திணித்தல்: ஹிந்தியை கற்றால் மட்டுமே வட மாநிலங்களுக்கு போய் வேலை பார்க்க முடியும் என்ற காலகட்டம் ஒன்று இருந்தது. உலகமயமாக்கலுக்கு பிறகு, அனைத்து தேசிய இனங்களின் மக்களும் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது இயல்பாக நடந்தேறி வருகிறது. இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிக்கும் போக்குக்கு இயல்பாகவே முகசுழிப்பும், எதிர்ப்புணர்வும் பரவி வருகிறது என்பது தான் நிதர்சனம். 

(5) கல்வியறிவு: பிஜேபி பலமாக இருக்கும் பல மாநிலங்களை விட தமிழ்நாடு கல்வியறிவில் மிகச்சிறந்த இடத்தில் உள்ளது. இந்துக்களாக தங்களை பதிவு செய்துகொண்டாலும், திராவிட கோட்பாட்டின் மீதான பற்றை அக்கல்வி அவர்களுக்கு கொடுத்துள்ளது. (இடஒதுக்கீட்டு விஷயத்தில் பிஜேபியின் கடந்தகால அணுகுமுறைகளை தமிழர் மனங்களில் இருந்து அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது).


(6) பண்பாட்டு ரீதியான வேறுபாடு: நடுகல் மற்றும் குலசாமி வழிபாடு மரபு, தமிழர் இரத்தத்தில் ஊறிப்போய் கிடக்கிறது. கோயிலில் ஆடு\கோழி வெட்டக்கூடாது என்ற போது கிளர்ந்து எழுந்த சமூகம் இது. அச்சமூகத்தின் மீதான 'சமிஸ்கிருதமாக்கல்' போன்ற பண்பாட்டு ரீதியான திணித்தலுக்கு பின்னால் இருக்கும், 'நாம்-அவர்கள்' என்ற இடைவெளியை தமிழர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். ஆக, 'இந்துநாடு' என்ற கோஷம் தமிழகத்தில் எடுபடாமலே இருக்கிறது.


(7) கும்பல் அரசியல் மற்றும் கேட்பாட்டு ரீதியான அரசியலின் தேவையின்மை :  தங்களை இந்துக்களின் பாதுகாவலர்களாக காட்டிக்கொண்டிருக்கும் சில இயக்கங்களின் 'அடாவடி' அணுகுமுறைகள் வெகுஜனங்களை எந்த அளவிலும் திருப்திப்படுத்தவில்லை என்பதே உண்மை. சிறுபான்மையினர் சரிக்கு சமமாக இருக்கும் பகுதிகள் மற்றும் கேரளாவோடு ஒட்டி இருக்கும் மாவட்டங்களை தவிர்த்து பிஜேபி தமிழ்நாட்டில் அரசியல் பேச எந்த காரணமும் இல்லாமல் இருப்பது. 

(8) ரசிக மனோபாவமும், தனிமனித வழிபாடும்: காங்கிரஸ், திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் வாக்குவங்கிக்கு பின்னால்,  'காமராசர்', 'கலைஞர்', 'எம்ஜிஆர்' என்ற பிம்ப வழிபாடுகள் பெரும்பங்கு வகிக்கிறது . ரஜினியை எப்படியாவது பிஜேபியில் இழுத்து விட வேண்டுமென்ற  பிஜேபின் தந்திரமும் இது தான்.ரஜினி தனிப்பட்டமுறையில் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் செய்தவரில்லை என்பதை தமிழக மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள், அரசியலில் களத்தில் அவரை நிராகரிப்பார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.


(9) அதீத காழ்ப்புணர்ச்சி அரசியல்: பிஜேபி மற்றும் அதன் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ் போன்றவை, சிறுபான்மையினரை ஒரு மனிதகுல விரோதி போல கற்பிக்க துவங்குகின்றன. நடைமுறையில் ஒரு சாமானிய கிறிஸ்தவனையோ\இஸ்லாமியனையோ ஆர்.எஸ்.எஸ்\பிஜேபி கருத்துருவாக்கத்தால் வளர்க்கப்பட்டவர்கள் எதிர்க்கொள்ளும் போது, தமக்கு கற்பிக்கப்பட்டதில் எத்தனை சதவீதம் உண்மை\பொய் இருக்கிறது என்பதை அவர்களே பகுத்தறிந்து, அந்த இயக்கங்களின் சித்தாந்தங்களில் இருந்து 'பெரும்பாலானோர்' வெளியே வருகின்றனர். RSS இயக்கம் துவங்கி ஏறக்குறைய 90ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஹிந்துக்கள் பெரும்பான்மையானோர் வாழும் நாட்டில் இன்றளவிலும் பல்வேறு பகுதிகளில் இவர்களால் ஊடுருவ முடியாததற்கு காரணம் இவர்களின் அதீத காழ்புணர்ச்சி அரசியலை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?.

(10) சாதி ரீதியான ஓட்டுக்கள்: இரட்டைக்குவளை, தடுப்புச்சுவர்கள் என சாதி ரீதியான அடக்குமுறைகளை எதிர்த்து எந்த குரலையும் கொடுக்காமல் மற்ற கட்சிகளை போலவே அந்தந்தப்பகுதி ஆதிக்க சாதியினருக்கு பின்னால் மற்ற கட்சிகளைப் போல ஒளிந்துக்கொள்கிறார்கள். கோயில் நுழைவு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை போன்ற முக்கியமான பிரச்சனைகளில் தமிழக பிஜேபி யின் நிலைப்பாடு என்ன என்பது கமலாலயத்துக்கே வெளிச்சம்.

Friday, August 29, 2014

ஜீமெயில் உபயோகிப்பது இன்னும் எளிது -2


டிஸ்கி: இப்பதிவின் நோக்கம் ஜீமெயிலை இன்னும் எப்படி எளிதாக கையாளலாம் என்பதே, முதலில் இருந்து கற்றுத் தருவதல்ல..

4) உங்கள் ஜீமெயில் அஞ்சல்பெட்டி(Mail Box) அடிக்கடி நிரம்பிக்கொள்கிறதா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்கானது தான். தொடர்ந்து வாசிக்கலாம். 

ஜீமெயில் நிறுவனம் இலவசமாக தந்திருக்கும் 15GB ஐ நெருங்கி எந்த மடலை அழிக்க வேண்டுமென்று என்றேனும் திணறி இருக்கிறீர்களா? ஜீமெயிலை தீவிரமாக பயன்படுத்துபவர்கள், பல்வேறு மின்னஞ்சல் குழுமங்களில் உறுப்பினராக இருப்பவர்கள் சாதாரணமாக எதிர்கொள்ளும் பிரச்சனை தான் இது.
மிக எளிமையான வினவலை(Query) மூலம் இப்பிரச்சனையை தீர்க்கலாம்.. கீழே உள்ள புகைப்படத்தில் கொடுத்திருப்பதை போல 'larger:10m' என்ற வினவலையை கொடுத்து, அருகில் உள்ள தேடு(search) பொத்தானை சொடுக்குங்கள்.உங்கள் மின்னஞ்சல் கணக்கில் 10 MB -க்கு அதிகமாக இருக்கும் மடல்கள் அனைத்தையும் அவை காட்டும். இப்போது உங்களுக்கு தேவையான மடல்களை வைத்து விட்டு, தேவையற்றது என்பவற்றை அழித்துக் கொள்ளலாம். '10M' என நான் கொடுத்திருப்பது ஒரு சிறு உதாரணமே.. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றது போல '2M','5M','20M' என நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். 


5)பழைய மடல்களை வாசிக்க வேண்டுமா?

ஏதேனும் தேவையின் நிமித்தம் மூன்றோ, ஐந்தோ வருடங்களுக்கு முன்பு வந்த உங்கள் மடல்களை வாசிக்க வேண்டுமா??எளிது.

கீழே உள்ள புகைப்படத்தைப் பாருங்கள் (ஒரு உதாரணத்திற்கு, ஏழு வருடங்களுக்கு முன்பு எனக்கு வந்த மடல்களை தேடி இருக்கிறேன்). "older_than:'number'y" என்ற வினவலையை உபயோகப்படுத்துவத்தின் மூலம் நீங்கள் எளிதாக பழைய மடல்களை தேடிக்கொள்ளலாம்.

---------------------------------
அட, எங்க ஓடுறீங்க??இருங்க ;-).. மேலே குறிப்பிட்ட இரண்டு வினவலைகளையும் எப்படி சேர்த்து உபயோகிக்கலாம் என்பதையும் பார்த்து விட்டு நீங்கள் உங்கள் சோதனைகளை தொடங்கலாம்.

கீழே உள்ள புகைப்படத்தில் கொடுத்திருப்பதை போல, "larger:'number'older_than:'number'y" என்ற வினவலையை உபயோகிப்பதன் மூலம், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முன் உள்ள, மிக பெரிய மடல்களை நீங்கள் தேடிக்கொள்ளலாம். 


-தொடரும்

இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், முகநூல் வழியாகவோ, G+ வழியாகவோ உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய பதிவு: மொக்கைகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி


Sunday, August 3, 2014

1983 - ஒரு கிராமத்து கிரிக்கெட் காதலனின் கதை

1983 - திரைப்படத்தின் கதையை முதலில் கேட்ட போது,  இது ஒரு தோற்றுப் போனவனின் கதை என்று தான் நினைத்திருந்தேன். இந்திய கிராமங்களில் கிரிக்கெட் விளையாடும் லட்சோப லட்சம் சாமானியர்களில் ஒருவனின் கதை இது என்று படத்தைப் பார்த்து முடித்த போது தான் தோன்றுகிறது.  

சச்சின் தனது 200-ஆவது டெஸ்ட் போட்டியை நிறைவு செய்து உரையாற்றும் காட்சியிலிருந்து படம் துவங்குகிறது. 'இனி தெய்வம் கிரீசுக்குள் இல்லை; அதை நம்பவும் முடியவில்லை, சங்கடத்தை தாங்கவும் முடியவில்லை...' என்று தனக்குத்தானே விசனப்படும் நாற்பது வயது ரமேஷின் பால்யத்தை நோக்கி திரைக்கதை நகர்கிறது.














1983-ஆம் ஆண்டு லார்ட்ஸில்  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலககோப்பையை இறுதிப்பொட்டியை தூர்தர்சன் வழி, விழி அகலாமல் பார்த்துக்கொண்டிருக்கும் பத்து வயது ரமேசும் அவனுடைய நண்பர்களும்,  இந்திய அணி கோப்பையை வென்றதும் பட்டாசு வெடித்து கொண்டாடித் தீர்க்கிறார்கள். மோட்டார் மெக்கானிக்கான கோபி ஆசான், தனது மகன் ரமேஷை எப்படியாகிலும் மெக்கானிகல் எஞ்சினியர் ஆக்கி விட வேண்டுமென ஆசைப்படுகிறார். படிப்பில் ரமேஷ் சுட்டி என்றாலும் கிரிக்கெட் விளையாடுவதையே பெரும் பொழுதுபோக்காக கொண்டிருக்கிறான். படிப்பின் வாசனை கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து, பத்தாம் வகுப்பை தட்டி தடுமாறி கடக்கும் ரமேஷ், ப்ரீ டிகிரியில் தோற்றுப்போகிறான். மகனை குறித்து கனவுகளில் இருந்த கோபி ஆசான் உடைந்து போகிறார், ரமேஷின் பேட்டை வெட்டி எறிகிறார். ஆனாலும், அன்றும்  வீட்டாரின் கண் தப்பித்து  நண்பர்களோடு டோர்னமென்ட் விளையாடப் போகிறான் ரமேஷ்.


வேலைக்கு ஏதும் செல்லாமல் கிரிக்கெட் விளையாடுவதையே சுவாசமாக கொண்டு நடக்கும் ரமேஷின் மீதான நம்பிக்கை போக அவனது காதலி மஞ்சுளாவும் ஒருகட்டத்தில் அவனை பிரிகிறாள். தந்தை வழி கற்ற மெக்கானிக்கல் பணியை தொடரும் ரமேஷ், நண்பர்களின் வற்புறுத்தலின் பெயரில் திருமணம் செய்துக்கொள்கிறான். முதலிரவு அன்று, சுவரில் ஒட்டி இருக்கும் சச்சினின் புகைப்படத்தை பார்த்து 'யார் இது?' என கேட்டு ரமேஷை அதிர்ச்சிக்குள்ளக்குகிறாள் அவனது மனைவி.   

காலம் உருண்டோடுகிறது; ரமேசின் தனது மகனுக்குள் இருக்கும் கிரிக்கெட் ஆர்வத்தை பார்த்து பேட் ஒன்றை வாங்கிக்கொடுக்கிறான். இந்தியா மீண்டும் உலகக்கோப்பையை கைப்பற்றுகிறது. ரமேஷ் அப்போதும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கிறான். ரமேசின் ஆட்டத்தை பார்த்து பிரமித்துப் போன முன்னாள் கேரளா கிரிக்கெட் கேப்டன் விஜய் மேனன் வழியாக, அவருடைய அக்காடமியில் மகனை கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்புகிறான். ரமேஷின் மகன் 'Under-14' மாவட்ட அணிக்காக தேர்வு செய்யப்படுவதோடு படம் நிறைவு பெறுகிறது.


ரமேஷாக நிவின் பவுலி, விஜய் மேனனாக அனூப் மேனன், கோபி ஆசானாக ஜோய் மத்யூ என ஒவ்வொருவரும் அவரவரது கதாப்பாத்திரத்தை நிறைவாகவே  செய்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, இயக்கம் அப்ரிட் ஷைன். ரமேஷ் கதாப்பாத்திரத்தை மிக அழகாக செதுக்கிஇருக்கிறார்;  இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்ற கனவோடு விளையாடி தோற்று போனதாக சித்தரித்திருக்க முடியும்..  ப்ரி டிக்ரி தோற்று போனதோ, காதல் கைகூடாமல் போனதோ, சரியான வேலையில்லாமல் இருப்பது குறித்தோ, கிரிக்கெட்டில் பெரிய இடத்தை பிடிக்க முடியாது போனது குறித்தோ ரமேஷ் எப்போதும் கவலைப்படவே இல்லை. கிரிக்கெட் விளையாடுவது ஒரு வெறியாக மாறி, அதையே பொழுதுக்கும் செய்து கல்வியிலும், வாழ்க்கையிலும் சில கணங்களை ரமேஷ் தவற விடுகிறான்..பின்னர், மகனுடைய கிரிக்கெட் ஆசைக்கு உடன்பட்டு, அவனை வழிநடத்துகிறான் என்பதையே படம் பேசுகிறது.

1983 துவங்கி, இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான சில கணங்களை படம் நெடுக்க பதிவு செய்திருக்கிறார்கள். அன்றைய வளைகுடாவின் அரசியல் சூழ்நிலையையும், வெவ்வேறு கால இடைவெளிகளில் நண்பர்கள் பொருள் தேடி ஓடினாலும், கிரிக்கெட்டும்- சச்சினும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு கண்ணியாக தொடர்வதை அற்புதமாக திரைக்கதையாக்கி இருக்கிறார்கள்.















ஏறக்குறைய கிராமங்களில் கிரிக்கெட் விளையாடிய ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ரமேஷ் ஒளித்து இருக்கிறான். யோசித்துப் பாருங்கள், கிரிக்கெட் விளையாடுவதை தவிர, கிரிக்கெட் குறித்து வேறு என்ன ஆசைகள் அன்று நமக்குள் இருந்திருக்க முடியும்? ரமேஷை போல சச்சினை எப்பிடி நேசிக்க துவங்கினோம்? சச்சினுடைய குழந்தைகளை தொலைக்காட்சிகளில் காணும் போது, நமக்கு நம் வீட்டு குழந்தைகள்  போல ஏன் மனம் குதூகலிக்கிறது? சச்சினுடைய இருநூறாவது டெஸ்டின் இறுதிநாள் உரையை கேட்கும் போது ஏன் நம்மை அறியாமல் கண்கள் பனிக்கிறது?
ஆம், நாம் சச்சினோடு வளர்ந்தோம்.. ஆகவே, சச்சினை அளவு கடந்து நேசிக்கிறோம்.

நீங்கள், எண்பதுகளில் கிரிக்கெட் விளையாட துவங்கியவராக இருந்தால், இப்படத்தின் மூலம் சில நல்ல நினைவுகளை கண்டிப்பாக அசை போட்டு வரலாம். Don't miss it. 

Sunday, January 26, 2014

101 சோத்யங்கள் (101 கேள்விகள்) : 101 Chodyangal

நான்: லேய் மக்கா, அவங்க உனக்க அம்மையில்லியா?
குமார்: இல்ல மக்கா, அவங்க எனக்க பெரியம்ம.. அவங்க தான் எங்கள சின்ன வயசுல இருந்து வளக்கிறாங்க..


நான்: உனக்க அம்மையை உனக்கு ஓர்ம இருக்கா?


குமார்: ம்ம்.. ஆனா, ரெண்டு தங்கச்சிமாருக்கும் ஓர்ம இருக்குமான்னு தெரியல..

நான்: எப்பிடி இறந்தாங்க?
குமார்: தெரியாது?

நான்: நீ அழுதியா?
குமார்: இல்ல அழல்ல.. எல்லாரும் சொன்னாங்க 'மக்களே கொம்ம செத்து பெய்ட்டா... அழுலன்னு' எனக்கு அழுகையே வரல்ல.. ஏன் நான் அழல்லன்னு இன்னும் தெரியல?!?!


--------------------------------------------------------------


ஒரு சாதாரண அடிமட்ட தொழிலாளியாக, தான் பணிபுரிந்துவரும் ஆலையை விட பெரிய ஆலையை தன் மகன் கட்ட வேண்டும் என்றஆசையோடு, இந்தியாவின் தொழிற்சாலை நகரமான 'பொக்காரோ' வை தன்மகனுக்குப் பெயராக வைத்து, பெரும் கனவுகளோடு வாழும் சிவானந்தன், தொழில்சாலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார் என்ற காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்படுகிறார். அரசு ஆரம்பப்பள்ளியில் ஐந்தாவது வகுப்பில் படிக்கும் மூத்த மகன் அனில்குமார் பொக்காரோ, புத்தி சுவாதீனமற்ற  இளையமகள், குடும்பத்தை நடத்த அரசின் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் சாலை சீரமைப்பு வேலைக்கு செல்லும் மனைவி என கஷ்டமான குடும்பச்  சூழ்நிலை.




அனில்குமார் படிக்கும் அரசுப்பள்ளியில் புதிய ஆசிரியராக வரும் முகுந்தன், ஆசிரியர் பணி அல்லாது நாடகங்கள், சமூக சேவை, சிறுபுத்தகங்கள் எழுதுவது என பல்வேறு விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார். அனில்குமாரின் குடும்பச்சூழ்நிலையை தெரிந்துக்கொண்டு, அவனிடம் தன்னிடம் வந்த புத்தக வேலையின் ஒரு பகுதியை செய்யச்சொல்கிறார். ஆம், பதில் கிடைக்கக்கூடிய 101 கேள்விகளை உருவாக்கச்சொல்கிறார். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு ரூபாய் வீதம் நூற்றியொரு ரூபாய் அவனுக்கு தருவதாக ஒப்புக்கொள்கிறார். கேள்விகளை தேடி அனில்குமார் அலைகிறான்.

இதனிடையே, ஆலையில் இருந்து நீக்கப்பட்ட தனக்கு எப்படியும் வேலை கிடைத்துவிடும் என தொழிற்சங்கவாதிகளுக்கு பின்னாலும்,  அரசியல்வாதிகளுக்கு பின்னாலும் நடையாய் நடக்கிறார் சிவானந்தன். அனில்குமாரின் குடும்பச்சூழ்நிலை மோசமாக, அவன் எழுதி வைத்திருந்த அறுபது கேள்விகளுக்கான பணத்தை முகுந்தன் அவனுக்கு கொடுத்து மீண்டும் நாற்பத்தி ஒரு  கேள்விகளை தேடிச்செல்லுமாறு சொல்கிறார்.அந்த அறுபது ரூபாயில் அன்று சிவானந்தன் வீட்டு உலை கொதிக்கிறது.


நூறு கேள்விகளை தேடித்தேடி அனில் கண்டுப்பிடிக்கிறான். உற்சாகத்தோடு வீட்டுக்கு வரும் வழியில், தந்தை விழுந்து கிடப்பதை பார்க்கிறான்.. ஆம், சிவானந்தன் இறந்து கிடக்கிறார். அனில்குமாரின் தந்தை இறந்துவிட்டதை அறிந்து தொழிற்சங்கவாதிகளும், அனிலின் சக பள்ளி மாணவர்களும் வருகிறார்கள்.. முகுந்தனும்..




மரணவீட்டில் முகுந்தனை பார்த்த அனில்குமார், நூறு கேள்விகள் எழுதிய நோட்டுப்புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு கேட்கிறான் "சார், இதில நூறு கேள்வி இருக்கு.... எனக்கு தோணுறதை தவிர, இந்த கேள்விகளுக்கு சரியான விடை எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்துக் கொள்ளவும் ஆசை இல்லை. ஆனா, சார் எனக்கு என்னோட நூற்றி ஒண்ணாவது கேள்விக்கு பதில் தரணும்.. எனக்கு என்னோட அப்பாவை ரொம்ப பிடிக்கும். அப்பாவுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். அம்மாவும் சொல்லுவாங்க, எனக்கும் தெரியும் அப்பா இறந்தால் குழந்தைகள் அழணுமுன்னு..ஆனா, சாரே எனக்கு மட்டும் ஏன் அழுகை வரல்ல?". ஆசிரியர்களும், சுற்றி இருந்தவர்களும் விக்கித்து நிற்க விடையில்லாத அந்த கேள்வியோடு படம் நிறைவடைகிறது.



----------------------------------------



படத்தைப் பார்த்து முடித்த போது எனக்கு குமாருடைய விடையில்லாத குமுறல் தான் நினைவுக்கு வந்தது. மரணம் வெகுசூனியமானது... நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் அது ஒருநாள் நம்மை அடைந்தே தீரும். நெருக்கமான ஒருவருடைய மரணம் நமக்கு அழுகையை கொண்டுவருகிறது  என்பதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம். ஆனால் நெருக்கமான ஒருவருடைய மரணத்தில் அழுகை வரவில்லையென்றால் அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?.


அந்த 101 ஆவது கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்..அப்பதிலை அனில்குமாரிடம் என்னால் சொல்ல முடியாது... ஆனாலும், குமாரிடம் என்னால் சொல்ல முடியும்.





புகைப்படங்கள் உதவி: பல்வேறு இணையதளங்கள்.