Wednesday, February 24, 2010

அஜித்குமார் என்ற ஆண்மகன்

இந்த பதிவை எழுதுவதால், நான் அஜித்தின் தீவிர ரசிகன் என்றோ, அவருடைய மன்றத்தின் ஆயுட்கால உறுப்பினன் என்றோ தவறாக எண்ணி விட வேண்டாம். அஜித்தின் ஒரு சில திரைப்படங்களை மட்டும் பார்த்திருக்கிறேன், அதுவும் நன்றாக இருக்கிறது என நண்பர்கள் சொன்னால் மட்டும்.... இருப்பினும் கடந்த சில வாரங்களாக அஜித்தை மையம் கொண்டு சுழலும் சர்ச்சைகளே இந்த பதிவினை எழுத தூண்டியது...

'தமிழ்நாடு மன்னராட்சி காலத்தில் தான் இருக்கிறதா ?' என சில நேரம் தோன்றி விடுகிறது. ஏனென்றால் மன்னராட்சி காலத்தில் தான் பெரும்பாலும் கருத்துரிமை பறிக்கப்பட்டிருக்கும்.. அரசனை சுற்றி இருக்கும் மங்குணி அமைச்சர்கள் எடுபிடியாகவே இருப்பார்கள்.... அரசனுக்கு அசதி ஏற்ப்பட்டால் அதை போக்க அரசவை கவிஞர்கள் வேறு....இன்னும் எக்ஸட்ரா எக்ஸட்ரா....( இந்த எக்ஸட்ரா எக்ஸட்ரா-வில் அந்தபுரம் உண்டா என கேட்காதீர்கள் )

இந்த 2010 ஆண்டில் 700 கோடி மக்கள் தொகையை தாண்டி உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது...இன்றும் தமிழகத்தில் தனது பதவியை தக்க வைத்து கொள்ள அரசர் காலத்தை விட மோசமான சுயநல அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது... தன் இன மக்கள் சுமார் 10 மைல்களுக்கு அப்பால் கொல்லப்பட்ட வேளையில் அறிக்கை மட்டுமே விட்டு விட்டு குளுகுளு இடங்களில் ஓய்வும், மாலை நேரங்களில் சினிமா பதுமைகளின் நடனமும் மட்டுமே இந்த அதிகார மையங்களுக்கு தேவைப்பட்டது..இனத்திற்காக தங்களும் ஏதோ செய்தோம் என்று காட்ட உண்ணாவிரத நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன....

ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி இருக்க வேண்டும்??? அதுவும் வயதை கடந்த ஒரு முதியவரிடம் எப்படிப்பட்ட பக்குவத்தை நாம் எதிர்பார்ப்போம்..இந்த நாட்டின் எல்லா விருதுகளும், புகழ் மாலைகளும் தனக்கு அப்பாற்பட்டது என்று எண்ணும் குறைந்த பட்ச தகுதி.... ஆனால் தமிழகத்தை ஆளுபவர்களுக்கோ மாதத்திற்கு மூன்று விருதுகள் கிடைக்கவில்லை என்றால் தானாகவே நடுக்கம் வந்து விடுகிறது போலும்....இதை தவிர்த்து எல்லோரும் தன்னை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நப்பாசை வேறு...

இப்படி சினிமா உலகம் நடத்திய பாராட்டு விழாவில் தான் ஒரே ஒரு குரல் வெளிப்படையாக தன்னுடைய கருத்தினை தமிழகத்தின் முதல் குடிமகனுக்கு முன்னால் பதிவு செய்தது. அதுவும் அவருக்கு எதிராக அல்ல, சினிமா முதலாளிகளுக்கு எதிராக... அந்த குரலுக்கு சொந்தகாரர் திரைப்பட நடிகர் அஜித்.. "பெரும்பாலான விழாக்களுக்கு தங்கள் விருப்பம் இல்லாமல் மிரட்டியே அழைக்கப்படுகிறோம், அரசியல்வாதிகளை பொது பிரச்சச்சனைகளை பார்த்து கொள்ள சொல்லுங்கள், நாங்கள் எங்கள் தொழிலை மட்டும் பார்க்கிறோம்" என்பதே அவருடைய பேச்சின் சாராம்சம்..


மாற்று கருத்து உடையவராக இருந்தாலும், அந்த நபருக்கான கருத்து உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் பெரியார்..... பெரியாரின் பெயரை சொல்லி பதவிக்கு வந்த இந்த போலி பகுத்தறிவாளர்களுகோ பயம் ஏற்பட்டு விட்டது.சம்மந்தப்படவர்களை என்னவென்று விசாரித்து நடந்து கொண்டிருக்கும் 'மிரட்டல்' பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயலாமல் 'வேறு ஒருவரையே சொன்னாலும், தனக்கு முன் எப்படி சொல்லலாம்' என்ற பாசிச சிந்தனையுடன் பிரச்னையை அணைத்து விட பார்க்காமல் தொடர்ந்து குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.... அதன் தொடர்ச்சியே ஜாகுவார் தங்கம் முதல் திருமா வரை விடும் அறிக்கைகள்....

இது போதாது என்று இனம் மற்றும் ஜாதி பிரச்சனைகளை கொண்டு அஜித்தின் மேல் சேறு வாரி இறைக்கிறார்கள், போதாததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறது பெப்சி. "மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது, வேண்டுமென்றால் நடிப்பதை விட்டு விடுகிறேன்" என ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார் அல்டிமேட் ஸ்டார்... அது தான் அஜித். இந்த கலககுரல், இந்த கம்பீரம் தான் இன்று என்னை போன்ற ரசிகன் அல்லாத சினிமா பார்வையாளன் மனதில் அஜித்தை நிரந்தர இடம் பெற செய்திருக்கிறது..

விழா அரங்கிலையே எழுந்து நின்று கைதட்டி தனது பேராதரவை தெரிவித்தார் ரஜினி. 1996 ஆண்டு தேர்தலுக்கு முன்னிருந்தே அவர் என்ன பேசினாலும் சர்ச்சைகள் உருவாவதை தவிர்க்க முடிவதில்லை.... சூழ்நிலைகளின் கைதி போல் கொந்தளிப்பான மனநிலையில் இருந்த ரஜினி தான் பேச முடியாததை அஜித் பேசியதால் விழா மேடையிலேயே எழுந்து கைதட்டினார்..
ஆனால் அவருக்கும் ஒரு கண்டனத்தை தெரிவித்தது பெப்சி..நடிகர்களுக்கு சமூக அக்கறை வேண்டாமா ? எனபது மட்டுமே எதிர் கோஷ்டியினர் கேட்கும் ஒரே கேள்வி... சமுக அக்கறை என்பது மேடையில் மட்டுமே வீர வசனம் பேசி கைதட்டல் வாங்கி விடுவது என இந்த அறிவிலிகள் நினைத்திருக்கிறார்கள் போலும்..



தொழில் முறையில் சக போட்டியாளராக இருந்தாலும் விஜய் தனது ஆதரவை அஜித்துக்கு தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.அறிக்கை விடாமல் இருந்தாலும் சக நடிகர்கள் பலர் தங்களுடைய ஆதரவை அஜித்துக்கு தெரிவித்து உள்ளனர்... நடந்ததும், நடந்து கொண்டிருப்பதும் மொழி, இன பிரச்னை அல்ல.... தன்மான பிரச்சனை... பெப்சிக்கு தம் அமைப்புக்கு எதிராக ஒரு முன்னணி நடிகர் பேசி விட்டாரே என்று.......... முதல்வருக்கோ தன் பாராட்டு விழாவில் ஒரு எதிர் குரல் கேட்டு விட்டதே என்று..

அஜித் கிளப்பிய பொறி இந்த அதிகார மையங்கள் திருந்தி கொள்ள ஒரு வாய்ப்பாக அமையட்டும்... இல்லையேல் காலம் இவர்களுக்கு எல்லாவற்றையும் கற்று கொடுக்கும்...

புயலாக வந்து எல்லோருடைய மவுனங்களையும் உடைத்த நடிகர் அஜித்துக்கு ஒரு ராயல் சல்யுட்


Wednesday, February 10, 2010

சாரு நிவேதிதாவின் நரகத்திலிருந்து ஒரு குரல்



தமிழகத்தின் வரலாற்றை எழுதும் போது தமிழ் சினிமாவின் வரலாற்றையும் சேர்த்தே எழுத வேண்டும். ஒவ்வொரு தமிழனின் வாழ்விலும் சினிமா ஒரு அங்கமாகவே மாறி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.அந்த உண்மையை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இரண்டுத் தலைமுறைகளைக் கடந்தும், தொடர்ந்து நம்மை 'ஆண்டு' கொண்டிருப்பவர்கள் தமிழ் சினிமாவில் ஆடியும் பாடியும கதையும் வசனமும் எழுதியவர்களே.

இன்றும் ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகளுக்கு, 'ஆட்சி'யைக் கைப்பற்ற யாரோ ஒரு நடிகரின் 'வாய்ஸ்' தேவைப்படுகிறது.
இத்தனை வல்லமைப் படைத்ததா தமிழ் சினிமா ?
சினிமா பிரமுகர்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியுமா ?
அவ்வளவு படைப்பாற்றல் இங்கே இருக்கிறதா??
அத்தனைக் கொண்டாடப்பட வேண்டியதா தமிழ் சினிமா ?
- என நம் மனதுக்குள் எழும் கேள்வியை 'நரகத்திலிருந்து ஒரு குரல்' வழியாக உரக்கக் கேட்கிறார் சாரு நிவேதிதா.

'பகடிகளின் மன்னன்' என்ற பட்டதை சாருவுக்கு தாரளமாக தரலாம். பக்கத்துக்குப் பக்கம் நகைச்சுவை கொப்பளித்தாலும், ஒவ்வொரு கட்டுரையின் அடிஆழத்திலும் நீரோட்டமாக அமைந்திருப்பது அவரின் நியாயமான கோபங்களும், நேர்மையான ஆதங்கங்களும் மட்டுமே.

தமிழ் சினிமாவின் பிரம்மாக்கள் என சினிமா உலகம் கூறி வரும் ஒரு சிலரின் பிம்பங்களை உடைத்து எறிந்திருக்கிறது சாருவின் பேனா முனை.
இந்தப் பிரம்மாக்களின் தீவிர ரசிகர்களை கூட 'ஆமாம்' போட வைக்கத் தகுந்த காரணங்களை அவர் அடுக்குகிறார் .

சிறந்த சங்கீதப் படம் என இன்றளவும் சிலரால் சிலாகிக்கப்படும் 'சங்கரா பரணம்' குறித்த சாருவின் விமர்சனப் பார்வை இந்தத் தொகுப்பில் முதலாவது கட்டுரையாக இடம் பெற்று உள்ளது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை மிகவும் வித்தியாசமானது. அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்ததே ஒரு துர்பாக்கியம் என்பதோடு, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் விவரித்துச் செல்கிறார்.

'கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதம்' என்ற கட்டுரையில் கமல், சிவாஜி, பாலச்சந்தர் - ஆகியோரின் முன் அவர் எடுத்து வைக்கும் கேள்விகள், தமிழ் சினிமாப் பார்வையாளனுக்கு மிக முக்கியமானது.
'நல்ல நடிகர்கள் என்ற விதத்தில் மாற்றுக் கருத்து எதையும் முன்னிறுத்தாமல், ஒரு கலைஞனாய் பாமர ரசிப்புத் தன்மையை மீறிய படைப்புகளைக் கொடுப்பதில் உங்கள் பங்களிப்பு என்ன ?!' என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. 'ஏன் ஒரு தீவிர படைப்பாளியின் கையில் உங்களை கொடுக்க மாறுகிறீர்கள்?' என உரிமையோடு கமலைப் பார்த்து சாரு கேட்கிறார்.

சாரு தன் கூர்மையான பார்வையால் தமிழ் சினிமாவின் நல்ல படைப்புகளையும் பாராட்டத் தவறவே இல்லை.
'நான் கடவுள்' திரைப்படம் பற்றிய 'நரகத்திலிருந்து ஒரு குரல்' என்னும் கட்டுரையில் அக்குவேறு, ஆணிவேறாக படத்தின் நிறை குறைகளைப் பற்றி பேசுகிறார்.
எழுத்து உலகத்தில் ஜெயமோகன் மேல் எத்தனை விமர்சனத்தைக் கொண்டிருந்தாலும், இந்தத் திரைப்படத்தில் ஜெயமோகனின் வசனப் பங்களிப்பைக் குறிப்பிட்டு அவர் பாராட்டி எழுதுகிறார்.
அத்திரைப்படத்தை சாரு நிமிடத்துக்கு நிமிடம் சிலாகித்துப் பார்த்திருப்பது அவரது எழுத்துக்களில் தெறிக்கிறது.

'ஸ்லம் டாக் மில்லியனர்' திரைப்படத்திற்கான கட்டுரையில், அப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என ஒரு ஞானியைப் போல் தீர்மானமாய் முன்கூட்டியே சொல்கிறார்.
காலமும் அவ்வாறே நிகழ்த்திக் காட்டியது.
ஒரு விமர்சகனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும் !?

அதே போலவே - இளையராஜாவின் இசைக் குறித்து சாரு விவரிக்கும் கட்டுரை மிக நுட்பமானது, கவனிக்கப்படத்தக்கது .
அதனைத் தொடர்ந்து வரும் அக்கட்டுரைக்கான எதிர்வினைகளுக்கும் சலிக்காமல் தன் விளக்கங்களை பதில்களாக முன் வைக்கிறார்.

ஒரு வட்டத்துக்கு உள்ளேயே சுற்றி வரும் தமிழ் சினிமாவின் இன்றைய சூழ்நிலைகளை அவர் தொடர்ந்து விமர்சித்தாலும், மாற்று மொழிகளில் வரும் நல்ல திரைப்படங்களைத் தமிழ் வாசகனுக்கு அறிமுகப்படுத்தவும் அவர் தவறவில்லை.
அதுவும் ' தேவ். டி.' என்ற ஹிந்தித் திரைப்படம் குறித்த அவருடைய பார்வை அற்புதம்.

தமிழ் சினிமா குறித்து வந்திருக்கும் பல புத்தகங்களில் சாரு நிவேதிதாவின் - 'நரகத்திலிருந்து ஒரு குரல்' முற்றிலும் வித்தியாசமானது.
தமிழ் சினிமாவையும், அதன் போக்கையும் ஆஹா.. ஓகோ... எனப் புகழ்ந்து எழுதப்படும் மற்ற புத்தகங்களுக்கு சரியான ஒரு மாற்று 'நரகத்திலிருந்து ஒரு குரல்'.

யாருமே கேட்க முற்படாத கேள்விகளை வெகு லாவகமாக எடுத்து நம் முன் வைக்கிறார் சாரு.

இந்தப் புத்தகம் முழுவதும் 'தமிழில் நல்ல சினிமாவுக்கான சூழ்நிலை வராதா?' என்ற ஏக்கப் பெருமூச்சுப் படர்ந்து கிடக்கிறது.
புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது அந்த மூச்சுக் காற்று வாசகனையும் தழுவிக் கொள்கிறது.
இதுவே ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் வெற்றி.
சாரு இங்கே மாபெரும் வெற்றிப் பெற்றிருக்கிறார்.